அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன் டிரம்ப் உதவியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கும் உடனே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எதிர்பாராத வகையில் அவர்கள் இருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை டிரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் உறுதி செய்தார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக் கொண்டே, டொனால்ட் டிரம்ப், தனது அலுவல் பணிகளை மேற்கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில், அவரது மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் அளித்த ஆலோசனையின் பேரில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் வெளியிட்ட விடியோ ஒன்றில், நான் தற்போது வால்டர் ரீட் மருத்துவமனைக்குச் செல்கிறேன். நான் நன்றாக இருப்பதாகவே நினைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.