School Holiday: 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: Schools and colleges in Nagai, Mayiladuthurai and only schools in Tiruvarur district have been given a holiday today due to rains. கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று ஒருநாள், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.