ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின், கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்தின் 3ஆம் கட்ட பரிசோதனைகள் மீண்டும் தொடங்கப்பட்டது.
உலக நாடுகளை அச்சுறுதி வரும் கொரோனா வைரஸூக்கு இதுவரை உலகம் முழுதும், 2.8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகளில், பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதேபோல் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ரா செனேகா நிறுவனத்துடன் இணைந்து ‘ஏ.இசட்.டி., 1222’ என்ற தடுப்பூசியை பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
இந்த தடுப்பு ஊசிகளை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும், இரண்டாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 30 ஆயிரம் பேருக்கு, இந்த தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு, சமீபத்தில், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, மூன்றாம் கட்ட பரிசோதனைகள், கடந்த, 8ஆம் தேதி நிறுத்திவைக்கப்பட்டன. பிரிட்டனின் சிறப்பு மருத்துவ குழு, இதுகுறித்து ஆய்வு செய்து, ஏ.இசட்.டி., 1222 தடுப்பூசி பாதுகாப்பானது என, உறுதிப்படுத்தியது. அதன் பரிந்துரையை ஏற்று, எம்.எச்.ஆர்.ஏ., எனப்படும், சுகாதார மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், தடுப்பூசி பரிசோதனைகளை மீண்டும் துவங்க அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து பரிசோதனை பணிகள் தொடங்கியுள்ளது.