கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று மாலை நேரத்தில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இன்று முதல் 12ஆம் தேதி வரைக்கும் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னை நந்தனத்தில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. இன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூரில் இன்று மழை கொட்டித்தீர்த்தது.

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 12ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரைக்கும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடய லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.