தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவக்கம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக அறிவித்துள்ள சென்னை வானிலை மையம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: வெப்பச்சலனம் மற்றும் தமிழகத்தின் தென் கடலோரத்திலும் குமரிக்கடல் மற்றும் இலங்கை ஒட்டியும், கர்நாடக முதல் தென் தமிழகம் வரையும் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.