ஆயில் நிறுவனங்கள் நினைத்தால் பெட்ரோல் விலை குறையலாம்- நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது மத்திய அரசின் கையில் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ‘பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த முடியுமா? என்பது மகா பயங்கர தர்ம சங்கடமான கேள்வி. நான் என்ன சொன்னாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பெட்ரோல் விலை குறையுமா? குறையாதா? என்ற பதிலை மட்டுமே மீண்டும் கேட்பீர்கள். பெட்ரோல் விலை உயர்வுக்கு ஒரே ஒரு காரணம் இல்லை.

பல்வேறு காரணம் உள்ளது. ஆயில் நிறுவனங்கள் நினைத்தால் விலையை குறைக்க முடியும். எங்கள் கையில் ஏதும் இல்லை. மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது என்பது உண்மையே. எல்லாம் மாநிலமும் ஒத்துழைப்பு தந்தால் ஜி.எஸ்.டிக்கு கீழ் பெட்ரோல் விலையை கொண்டு வர முயற்சி மேற்கொள்ள இயலலாம்’என்று தெரிவித்தார்.