புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக தொடர் போராட்டம் !

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்பி, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜகான், சட்டப்பேரவை உறுப்பினர்கள் லட்சுமி நாராயணன், ஜான்குமார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, டெல்லியில் விவசாய சட்டத்தை ரத்து செய்யக்கோரி எப்படி அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறார்களோ. அதேபோல் கிரண்பேடியை திரும்ப பெறும் வரை அமைதியான முறையில் நமது எதிர்ப்பை காட்ட வேண்டும் என்றார். இதனையடுத்து, டெல்லியில் போராட்டத்தின்போது உயிர்நீத்த விவசாயிகளுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு 11ஆம் தேதி வரை இந்த போராட்டம் நடக்க இருக்கிறது. போராட்டதையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை வளாகம், அண்ணா சதுக்கம் ஆகிய பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படையினரை கொண்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.