தமிழகத்தில் கடந்த 51 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைவு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் மட்டும் 2,309 பேரும் மற்ற மாநிலத்தவர்கள் 3 பேரையும் சேர்த்து 2,312 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 46 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,986 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 51 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 65 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 48,778 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 2,312 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,31,118 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,52,68,724 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,360 பேர் ஆண்கள், 952 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,79,004 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,52,076 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,986 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,68,236 ஆக உயர்ந்துள்ளது.

46 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 18 பேர் தனியார் மருத்துவமனை யிலும், 28 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,652 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.