TN teachers: ஆசிரியர்களுக்கு கூடுதல் பணியால் கற்பித்தல் பணி பாதிப்பு

Tirupur-News-Impact-of-teaching-work-by-additional
கற்பித்தல் பணி பாதிப்பு

TN teachers: தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. கொரோனா தொற்று பரவ காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 2 ஆண்டுக்கு மேல் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. தொற்று பரவல் குறைந்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட துவங்கியுள்ளன.

தற்போது கூடுதலாக இதர பணிகள் வழங்கப்படுவதால் பணிச்சுமை ஏற்பட்டு கற்பித்தல் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து திருப்பூர் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:-

அரசு சார்ந்த எந்த ஒரு பணியாக இருந்தாலும் முதலில் ஆசிரியர்களே கூடுதல் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். கற்பித்தல் பணி மட்டுமின்றி, ஆண்டுதோறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம்.

தகவல்களை சேகரித்து வைக்கும் ‘எமிஸ்’ தளத்தில், மாணவர்களின் வயது, எடை, உயரம் உள்ளிட்ட விவரங்களை அவ்வப்போது பதிவிட வேண்டும். பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர் உட்பட அனைத்து விவரங்களையும் கணினியில் பதிவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தவிர மாணவர் சேர்க்கை, இல்லம் தேடி கல்வி திட்டம், தேர்தல் பணி என அனைத்துக்கும் களப்பணி ஆற்றுகிறோம். பெரும்பாலான அரசு பள்ளிகளில் பணியாளர்களின் பணியிடம் காலியாகவே உள்ளது. அப்பணிகளையும் நாங்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு கூடுதல் பணிச்சுமையால் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஊரடங்கு காலத்தில் போதிய கல்வி கிடைக்காமல் மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இதர பணிகளை தவிர்த்து மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: Weather Warning: தமிழகத்தை நோக்கி வரும் புயல்