அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டிரம்புக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டிரம்ப் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளிப்பதாகவும், எனினும் அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டிரம்ப் சிகிச்சை பெற்று வரும் ராணுவ மருத்துவமனை வளாகத்திற்கு அருகே ஒரு பை கிடந்தது. சந்தேகப்படும்படியான அந்த பையை யாரும் நெருங்கவில்லை. மருத்துவமனைக்கு வரும் சாலைகளை போலீசார் உடனடியாக மூடினர். மர்ம பை குறித்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அந்த பையை சோதனை செய்தனர். பின்னர் அந்த பையை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பையில் என்ன இருந்தது என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.