கோவை, மதுரையில் தேசிய பேரிடர் மீட்பு படை

கனமழை, நிலச்சரிவுக்கான முன்னெச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர், கோவை, மதுரையில் முகாமிட்டுள்ளனர்.

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் ‘தவுக்தே’ புயல் காரணமாக, கனமழை கொட்டும் என்றும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், தமிழகம், கேரளாவில், புயல் மழையால் பாதிக்க வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், கோவை மாவட்டத்துக்கு, 44 பேர் கொண்ட இரு குழுவினர் வந்துள்ளனர். இவர்கள், துடியலுார் அருகே முகாமிட்டுள்ளனர். இதேபோல, மதுரைக்கும் இரு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.