காங்கிரஸ் பார்லிமென்ட் குழு மாற்றி அமைப்பு

sonia-gandhi-appears-before-the-enforcement-directorate-today

பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 19) துவங்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா, கட்சியின் பார்லிமென்ட் குழுக்களை அமைத்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: பார்லி.,யின் இரு அவைகளிலும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படுவதை உறுதி செய்ய நிர்வாக ரீதியான மாற்றங்கள் செய்துள்ளேன். இரு குழுக்கள் நாள்தோறும் கூடி, அலுவல் தொடர்பாக விவாதிக்கும். அதுமட்டுமல்லாமல் பார்லிமென்டில் முக்கிய விவாதங்கள் நடக்கும் முன்பாகவும், கூட்டத்தொடர் இடையேயும் கூடி விவாதித்து முடிவு எடுப்பார்கள். இரு குழுவையும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டி ஆலோசனை நடத்துவார்.

இதன்படி, லோக்சபா தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்கிறார், துணைத் தலைவராக கவுரவ் கோகய் செயல்படுவார். லோக்சபாவின் தலைமைக் கொறடாவாக கே.சுரேஷ் செயல்படுவார். ரவ்னீத் சிங் பிட்டு, மாணிக்கம் தாகூர் ஆகியோர் கொறடாக்களாக இருப்பார்கள். காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி, சசி தரூர் ஆகியோர் கொறடா குழுவில் இடம் பெறுவர்.

ராஜ்யசபா தலைவராக மல்லிகார்ஜூன கார்கே செயல்படுவார், துணைத் தலைவராக ஆனந்த் சர்மா இருப்பார். தலைமைக் கொறடாவாக ஜெய்ராம் ரமேஷும், கொறடா குழுவில் அம்பிகா சோனி, ப.சிதம்பரம், திக்விஜய் சிங், கே.சி.வேணுகோபால் ஆகியோர் இருப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.