நடிகர் சிம்பு, டி.ராஜேந்தர் மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கடந்த 2016 ம் ஆண்டு சிம்பு நடித்த ‘அன்பானவன்’, ‘அசராதவன்’, ‘அடங்காதவன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டதாகவும், படத் தயாரிப்பின்போது 50 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்த நிலையில் சிம்பு தன்னிடம், இத்துடன் இந்த படத்தை முடித்து வெளியிடுமாறு கேட்டுக் கொண்டதாகவும், ஒருவேளை திரைப்படம் நஷ்டம் அடைந்தால் தான் இலவசமாக ஒரு திரைப்படம் நடித்து தருவதாகவும் சிம்பு வாக்குறுதி அளித்தாத புகார் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆனால் திரைப்படம் சரியாக ஓடாததால் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் வரை தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது, ஏற்கனவே சொன்னபடி திரைப்படம் எதுவும் நடித்து கொடுக்காமல் தன்னை ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து, அந்த விசாரணையின் போது சிம்பு தனக்கு திரைப்படம் நடித்து தருவதாக ஒப்புக் கொண்டதாகவும் அதன் பின்னர் தன்னை ஏமாற்றி அலைகழித்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சிம்புவின் இந்த நடவடிக்கையால் தனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் இதுதொடர்பாக சிம்பு, அவரது தந்தை, அவரது தாயார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளித்திருக்கிறார்.

இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை: ரேஷன் கார்டுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம்