வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 3 பேர் நிலை கவலைகிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பட்டாசு ஆலை வெடிவிபத்து கவலையளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவார்கள் என நம்புவதாகவும் பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் பதிவில், இதுபோன்ற விபத்துகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சாதாரணமாகிவிட்டதாகவும், உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும், விபத்துகள் தொடராமல் தடுப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.