நடிகை ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்றக் காவல் வரும் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகரின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் மும்பையில் செப்டம்பர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் சோவிக் ஆகியோரின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் சோவிக் ஆகியோரின் நீதிமன்றக் காவல் வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் தவிர போதைப்பொருள் வழக்கில் கைதான மேலும் 18 பேருடைய நீதிமன்றக்காவலையும் வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.