கொரோனா சிகிச்சையில் ராணுவம் உதவ வேண்டும்

கொரோனா சிகிச்சை பணியில் இந்திய ராணுவம் உதவ வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாட்டுகளை அமல் படுத்தியுள்ளன.

இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், கொரோனா சிகிச்சை பணியில் மாநில அரசுகளுக்கு ராணுவம் உதவ வேண்டும். மேலும் ராணுவம், டி.ஆர்.டி.ஓ. ஆகிய அமைப்புகள், தங்களிடம் உள்ள நிபுணர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கூடுதல் படுக்கை வசதிகளை போர்க்கால அடிப்படையில் கொரோனா சிகிச்சைக்காக உள்ளூர் நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும்.

ராணுவ கமாண்டர்கள், மாநில முதல்வர்களை சந்தித்து, தேவையான உதவிகளை அளிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று கூறினார்.