Rajendra Balaji: ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்..!

ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்
ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்

Rajendra Balaji: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சுமார் ரூ.3 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இதையடுத்து கைது செய்வதிலிருந்து தப்பிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடியானது. தொடர்ந்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படைகள் அமைத்து தமிழக போலீஸார் தேடி வந்தனர்.

இதனிடையே அவர் தனது வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் தங்களிடம் கருத்து கேட்காமல் ஜாமீன் வழங்கக்கூடாது என தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த காவல் துறையினர் வெளிநாடுகளுக்கு தப்பிவிடக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. கடலோர பகுதிகள், வெளி மாநில எல்லைகள் என பல இடங்களில் முகாமிட்டு தேடி வந்தனர்.

ஒருவழியாக 20 நாட்களுக்கு பின்னர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 5 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் கர்நாடக போலீஸார் உதவியுடன் தமிழக போலீஸ் கைது செய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 15 நாட்கள் (ஜனவரி 20 வரை ) நீதிமன்றக்காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் வெளியூர் செல்லக்கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என நிபந்தனை விதித்தது.

இச்சூழலில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜேந்திர பாலாஜி இன்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கடந்த 28ஆம் தேதி சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி ராஜேந்திர பாலாஜி இன்று காலை 10 மணிக்கு தனது வழக்கறிஞர்களுடன் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது கடிதம் ஒன்றை வழங்கினார். அதில், “எனக்கு கடந்த 23ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் நான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். மீண்டும் தற்போது கொரோனா பரிசோதனை செய்து உள்ளேன்.

அதன் முடிவில் தொற்று இல்லை என்று சான்று வந்ததும் நான் விசாரணைக்கு ஆஜராகிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார். கடிதத்தை ஏற்றுக்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், “கொரோனா பரிசோதனையில் ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா தொற்று இல்லை என சான்று வந்தவுடன், மீண்டும் சம்மன் அனுப்பி அவரை விசாரணைக்கு அழைக்க இருக்கிறோம்” என தெரிவித்தனர். இதையடுத்து வழக்கறிஞர்களோடு அங்கிருந்து ராஜேந்திர பாலாஜி புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: education news : சுழற்சி முறை வகுப்புகள் !