திருச்சி அருகே வாகன சோதனையில் 1 கோடி ரூபாய் பறிமுதல்

திருச்சி பெட்டவாய்த்தலை அருகே வாகன சோதனையில் 1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முசிறி அதிமுக எம்எல்ஏ வும், வேட்பாளருமான செல்வராசுக்கு பணத்தைக் கொண்டு சென்றதாக மாவட்ட கவுன்சிலர், எம்.எல்.ஏ. கார் ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி – கரூர் சாலை பெட்டவாய்த்தலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த வெள்ளை நிற இனோவா காரை நிறுத்தி சோதனையிட்ட முயன்றபோது, காரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த சாக்குமூட்டையில் பணம் இருப்பதால் அதனை வெளியே போட முயன்றனர். இதனை கண்ட பறக்கும் படை அதிகாரிகள் காரில் சோதனை செய்தபோது சாக்குமூட்டையில் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காரில் பயணித்த நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கார் திருச்சி முசிறி தொகுதி தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ. செல்வராசு மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது என்பதும் தொட்டியம் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்திய ராஜா, எம்.எல்.ஏ. செல்வராசு ஓட்டுநர் ஜெயசீலன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் நான்கு பேர் பயணித்ததும் தெரியவந்தது.