ஓய்வு பெறுகிறேன் – பி.வி.சிந்து அறிவிப்பு

டென்மார்க் பேட்மிண்டன் ஓபன் தொடரில் பங்கேற்க முடியாதது குறித்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வினோத கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

உலகின் மிகச்சிறந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க் ஓபன் டென்னிஸ் போட்டியே எனது கடைசி போட்டியாக இருக்கும் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பி.வி.சிந்து அறிவித்ததுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில் பி.வி சிந்து ஓய்வு பெறும் முடிவை எடுக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

பி.வி.சிந்து தனது டுவிட்டர் பக்கத்தில், டென்மார்க் ஓபன் போட்டிதான் இறுதி. நான் ஓய்வு பெறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக நான் என் மனதில் எழும் உணர்வுகளுடன் போராடி வருகிறேன். எனக்கு தவறான எண்ணங்கள், உணர்வுகள் வந்து கொண்டு இருக்கிறது. இதனால்தான் நான் இன்று இதை எழுதுகிறேன்.

இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை உணர்த்த இதை எழுதுகிறேன். இதை படிக்கும் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் என்று தெரியும். ஆனால் இதை படித்து முடிக்கும் போது என்னுடைய எண்ணமும், முடிவும் சரிதான் என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த கொரோனா தொற்று என் கண்ணை திறந்துவிட்டது. எனக்கு எதிரில் இருக்கும் எதிரணி வீரர்களை என்னால் எளிதாக வீழ்த்த முடியும். ஆனால் கண்ணுக்கு தெரியாமல் உலகத்தை ஆட்டிப்படைக்கும் இந்த வைரஸை எப்படி வீழ்த்த முடியும் என்று தெரியவில்லை. இணையத்தில் இது தொடர்பாக நான் படிக்கும் செய்திகள் இதயத்தை உலுக்கும் வகையில் இருக்கிறது. கொரோனா காரணமாக மக்கள் படும் கஷ்டங்களை படித்து வருகிறேன். இப்போது என்னால் டென்மார்க் பேட்மின்டன் தொடரிலும் பங்கேற்க முடியவில்லை. இதுதான் கடைசி. என்னை மோசமான எண்ணங்கள், எதிர்மறை விஷயங்கள் சூழ்ந்து இருக்கிறது.

இந்த எதிர்மறை எண்ணங்களில் இருந்து நான் ஓய்வு பெற விரும்புகிறேன். இன்றோடு நான் எதிர்மறை எண்ணங்கள், அச்சங்கள், நிலையற்ற தன்மைகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன். அதேபோல் தூய்மையில்லாத பழக்க வழக்கங்களில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அசுத்தமான செயல்களில் இருந்து ஓய்வு பெற போகிறேன்.

உங்களுக்கு நான் சின்ன ஹார்ட் அட்டாக் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இப்படி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. டென்மார்க் போட்டி நடக்கவில்லை. அதற்கு பதிலாக நான் கண்டிப்பாக ஆசிய பேட்மிண்டன் போட்டிகளில் ஆடுவேன். நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று பிவி சிந்து குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு பெறுவது போல சர்ச்சையை உருவாக்கி அதன் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வை பிவி சிந்து ஏற்படுத்தி உள்ளார். மக்கள் தூய்மையாக இருக்க வேண்டும், உடல் மற்றும் மன நலத்தை பேண வேண்டும் என்று என்று விழிப்புணர்வுக்காக பி.வி சிந்து டுவிட் செய்துள்ளார்.