புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரியில் கரோனா பாதிப்பு 98 விழுக்காடு குறைந்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, யூனியன் பிரதேச அரசு எடுத்த முடிவு வெற்றி கண்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தான் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தங்கும் விடுதிகளில் டி.ஜே உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கி செல்ல எந்தவித தடையும் இல்லை. உச்ச நீதிமன்றத்தை காரணம் காட்டி கிரண்பேடி புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்த விடாமல் தடுக்க முயற்சி செய்தார். கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்காமல் ஆளுநர் மாளிகையில் இருந்துகொண்டு அலுவலர்களை மிரட்டும் பணியில் ஈடுபடுகிறார்” என குற்றஞ்சாட்டினார்.