தனது சம்பளம் குறித்து கமல் உண்மையை சொல்ல வேண்டும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான் எனது சொத்து கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார் என்றும், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட தயரா என்றும் சவால் விடுத்துப் பேசினார்.

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய கடம்பூர் ராஜூ, எம்ஜிஆரை பழித்து பேசிய யாரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை என்றார். மேலும், எம்ஜிஆரை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர் என்றும் கூறினார்.

சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்ஜிஆர் பற்றி பேச அருகதை இல்லை என்று கூறிய கடம்பூர் ராஜூ, தரத்துடன் பேசுபவர்களுக்கு பதில் கூறலாம் நாட்டில் இருக்கிறதை காட்டி கொள்வதற்காக ரகளை பண்ணுவதற்காக வாய்க்கு வந்தபடி பேசுபவருக்கு பதில் சொல்வது முறையாக இருக்காது என்றும் கூறினார்.

பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலையைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அண்ணாமலை ஐபிஎஸ் படித்தாரா என்று தெரியவில்லை என்றும், மத்தியரசு விவசாயிகளுக்கு ரூ 6 ஆயிரம் வழங்குகிறார்கள், அவர்கள் எதில் இருந்து கொடுக்கிறார்கள் அரசு திட்டங்களுக்கு, அரசு நிதியில் இருந்துதான் கொடுக்க வேண்டும். இதை தவறாக சித்தரிக்கும் அண்ணாமலை என்ன அளவுகோலில் பேசுகிறார் என்று தெரியவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் எனது சொத்து கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார் என்றும், நடிகர் கமல்ஹாசன் வெளியிட தயரா? என்று சவால் விடுத்தார். மனசாட்சிபடி நடிகர் கமல்ஹாசன் தனது ஊதியம் குறித்து கணக்கு சொல்லட்டும், நாங்களும் சொல்ல தயராக இருக்கிறோம் என்றும் கூறினார்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் திரைத்துரையினருக்கு தேவையான உதவிகளை அரசு செய்துள்ளதாக தெரிவித்த கடம்பூர் ராஜூ, திரைத்துரையினர் வைத்த கோரிக்கைளையும் அரசு நிறைவேற்றி உள்ளது என்றும், சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்கள் இடம் பெறுவதற்கு தமிழக அரசு உதவி செய்துள்ளதாகவும், ஹாலிவுட் அளவிற்கு தமிழ் திரைப்படத்துறை வளர அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறினார்.