கேரளாவில் புதிதாக 4,138 பேருக்கு கொரோனா உறுதி

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கேரள அரசு முடுக்கி விட்டுள்ளது. இதனால், கேரளாவில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இந்த நிலையில், கேரளாவில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 138-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 33, 345-சளி மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர்.

கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேபோல் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். கேரளாவில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 12.41 சதவிகிதமாக உள்ளது என்று கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.