கோவின் இணையதளம் பாதுகாப்பானதா?

தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்யப்படும், கோவின் இணையதளத்தில் மக்களின் ஆதார் உள்ளிட்ட தகவல்கள் கசிந்ததாக வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கோவிட் தடுப்பூசி போடும் பணிகளை, ‛கோவின்’ இணையதளம் ஒருங்கிணைத்து வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமுள்ளோர் தங்களின் ஆதார் எண்ணைக் கொண்டு இந்த தளத்தில் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தளத்தை மர்ம நபர்கள் முடக்கி இருப்பதாகவும், அதில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்களின் தகவல்கள் கசிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவின் தளத்தில் தகவல்கள் கசிந்தது தொடர்பான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், கோவின் இணையதளத்தில் இருந்து எந்த தகவல்களும் கசியவில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை நேரத்துக்கு நேரம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், மக்களின் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.