‘பெங்களூரு – கொல்கத்தா’ அணிகளுக்கு இடையிலான ஆட்டம்..!

மீண்டும் தொடங்கியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் இன்று (திங்கட்கிழமை) அரங்கேறும் 31-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கேப்டன் விராட் கோலியின் பெங்களூரு அணி இந்திய மண்ணில் நடந்த முதல் பாதியில் சிறப்பாக விளையாடியது. 7 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் டிவில்லியர்ஸ் (207 ரன்), மேக்ஸ்வெல் (223 ரன்), தேவ்தத் படிக்கல்( 195 ரன்) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் தூண்களாக வலம் வருகின்றனர். இவர்களுடன் கேப்டன் விராட் கோலியும் (7 ஆட்டத்தில் 198 ரன்) நின்று ஆடினால் அணி வலுவான ஸ்கோரை எட்டி பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், கைல் ஜாமிசன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், புதிய வரவான இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா ஆகியோர் அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாததால் விமர்சனங்களை சந்தித்து வரும் கேப்டன் விராட் கோலி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தொடர் முயற்சி மேற்கொள்வார் என நம்பலாம்.

இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி முதல் பாதியில் 7 ஆட்டங்களில் 2-ல் வென்று 5-ல் தோல்வி கண்டு 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வெகுவாக தடுமாறியதை முதல் பாதியில் பார்க்க முடிந்தது. அணியில் நிதிஷ் ராணா (201 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் குறிப்பிடும்படி இல்லை.

முக்கிய வீரர்கள் சுப்மான் கில், கேப்டன் மோர்கன், ஆந்த்ரே ரஸ்செல், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் ஒருசேர அதிரடி காட்டினால் அணி எழுச்சி பெறுவது நிச்சயம். அமீரக ஆடுகளங்கள் ஓரளவு மெதுவான தன்மை கொண்டவையாக உள்ளதால் அந்த அணியின் ஹர்பஜன்சிங், குல்தீப் யாதவ், சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல்-ஹசன் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களின் சுழலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: மூன்று நாட்களுக்கு பள்ளி விடுமுறை..!