சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கவிஞர் வைரமுத்து..!

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஓ.என்.வி விருதை திருப்பி அளிக்க முடிவு செய்திருக்கிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத ஒருவரான கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த விருதைப் பெறுவதில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் வைரமுத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்டோர் இவ்விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்களுடன் பல பெண்ணியவாதிகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து ட்வீட் செய்தனர். இதையடுத்து வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் நேற்று அறிவித்தது.

தற்போது தான் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகவும், அதனால் அந்த விருதை திருப்பியளிக்க முடிவு செய்திருப்பதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.