குருவாயூர் கோயில் இரு வாரங்களுக்கு மூடல்!

குருவாயூர் கிருஷ்ணா கோயில் ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து கோயில் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணா கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த இக்கோயில், அண்மையில் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (டிச.13) கோயில் நிர்வாக ஊழியர்கள் பலருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால், அடுத்த 14 நாள்களுக்கு கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் கோயில் மூடப்பட்டாலும், மூலவருக்கு வழிபாடு, திருமுழுக்கு வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.