ஃபோர்டு – மஹிந்திரா முறிவுக்கு என்ன காரணம்?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோர்டு – மஹிந்திரா ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டணி ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக இரு நிறுவனங்களும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

இரு நிறுவனங்களின் அறிக்கையின்படி, உலகளாவிய பெருந்தொற்று நோய் தாக்கத்தால், கடந்த 15 மாதங்களில் உலகளாவிய பொருளாதார மற்றும் வணிக சூழ்நிலை மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இதனால் மூலதன ஒதுக்கீடு முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்ய ஃபோர்டு – மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் தனி முடிவுகள் பாதித்துள்ளன.

அக்டோபர் 2019ஆம் ஆண்டு ஃபோர்டு – மஹிந்திரா நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மூலமாக இந்தியாவில் ஃபோர்டு கார்களை உருவாக்க, சந்தைப்படுத்த, விநியோகிக்க ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இப்போது, இரு நிறுவனங்களும் இந்தக் கூட்டு முயற்சியை நிறுத்த முடிவுசெய்துள்ளன. இந்தக் கூட்டணியின் மூலம் 7 கார்களை அறிமுகம் செய்யவும், இந்தியா மட்டுமல்லாமல் வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இச்சூழலில், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் அடிப்படையிலான ஃபோர்டு சி-எஸ்யூவி காரினை உற்பத்தி செய்யவும், இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்து, 2021ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்ற புதிய ஈக்கோஸ்போர்ட் காரில் மஹிந்திராவின் 1.2 லிட்டர் TGDI (G12) என்ஜின் இடம்பெற வாய்ப்புகள் இருந்தன. இந்தத் திட்டங்கள் மட்டும் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளன.

எனவே, ஃபோர்டு இந்தியா முழுமையாக ஃபோர்டின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாக தொடர்ந்து இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.