மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

19 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று முதல் கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 40 பேரையும், 6 விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த டிசம்பர் 14ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். எனினும் சிறிய விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் மட்டும் கடலுக்குச் செல்ல, கடந்த 27ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த சூழலில், எதிர்வரும் பண்டிகை காலங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இன்று முதல் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு செல்லவும், ராமேஸ்வரம் மீனவர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.