கரோனா தடுப்பு மருந்து குறித்து பரவும் போலி செய்திகளை நீக்க பேஸ்புக் முடிவு

கரோனா தடுப்பு மருந்து குறித்து பரவும் போலி செய்திகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா குறித்த போலி செய்திகளும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகப் பரவத் தொடங்கியுள்ளது. இது மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்து குறித்து எதிர்மறையான கருத்தைப் பரப்பும் என்று அஞ்சப்படுகிறது. இவ்வாறு மக்கள் பலரும் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள மறுத்தால் கரோனாவைத் தடுக்க முடியாமல் போகும்.

இந்நிலையில், கரோனா தடுப்பு மருந்து குறித்து பரவும் போலி செய்திகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் வாரங்களில் பொது சுகாதார வல்லுநர்களால் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் தடுப்பு மருந்து குறித்த தவறான கருத்துகளை நீக்கும் பணிகள் தொடங்கப்படும்.இது குறித்து பேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தடுப்பு மருந்து விரைவில் உலகம் முழுவதும் வெளிவரும் நிலையில், வரும் வாரங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பொது சுகாதார வல்லுநர்களின் கருத்துகளின்படி தடுப்பு மருந்துகள் குறித்த போலி செய்திகளை அகற்றும் பணி தொடங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.