தமிழ்நாட்டில் வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு சட்டம்-2020) விவசாயிகளின் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தகம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய வேளாண் சட்டங்கள் மூன்றையும் மக்களவையில் இயற்றிருப்பது, நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குறிப்பாகத் தமிழ்நாடு விவசாயிகள் மத்தியிலும் மிகப்பெரிய அதிருப்தி எதிர்ப்பு அலைகளை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் இச்சட்டங்களை எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு என்றால் விவசாயிகள் நம் மாநிலத்தின் உயிரோட்டமானதும் விலை மதிப்பற்றதுமான அரிய சொத்துகள் அவர்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றிடும் கடமை உணர்ச்சியுள்ள மாநில அரசு மட்டுமே அவர்களின் பாதுகாவலனாக இருக்க முடியும்.அதனடிப்படையில் காலங்காலமாக இடைத்தரகர்களிடமிருந்து காப்பாற்றி விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்துவருகிறது. எனவே, வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானத்தை நிறைவேற்ற உடனடியாக தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.



