37.21 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது – மத்திய சுகாதார அமைச்சகம்

37.21 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1,206 பேர் 24 மணி நேரத்தில் கோவிட்டால் இறந்துள்ளனர். இன்றைய பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 42,766 பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 07 லட்சத்து 95 ஆயிரமாக பதிவானது.

நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 45,254 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 538 ஆனது. தற்போது 4 லட்சத்து 55 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,07,145 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.19 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.32 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.49 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவில் இன்று (ஜூலை 10) காலை 8 மணி நிலவரப்படி 37,21,96,628 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 30,55,802 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.