கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் மீண்டும் பண உதவி அளிக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடும்பம் ஒன்றுக்கு 2000 ரூபாய் வழங்கவதற்கான அனுமதியும், ஜி.எஸ்.டி வரியிலிருந்து மாநில பங்கிலிருந்து 3 ஆயிரம் கோடியை இதற்காக வழங்கும் படியும் மத்திய அரசிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரி கோரிக்கை விடுத்திருந்தார். அண்மையில் சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நிதித்துறை செயலர் கிருஷ்ணன், வணிக வரித்துறைச் செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் சந்தித்து அரசின் கோரிக்கை குறித்து வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 3000 கோடியை விடுவிப்பதாகவும், தமிழக மக்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு 2000 ரூபாய் வழங்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான கடிதத்தை மத்திய நிதி அமைச்சகம், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இதையடுத்து வரும் நவம்பர் மாதம் தீபாவளியையொட்டி தமிழகத்தில் குடும்பம் ஒன்றுக்கு தலா 2000 ரூபாயைத் தமிழக அரசு வழங்கவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது.இதை மனதில்கொண்டு தமிழக அரசு மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் 2ஆயிரம் ரூபாய் வழங்க திட்டம் வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.