காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்களை குப்பை தொட்டியில் வீசுவோம் – ராகுல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்களை குப்பை தொட்டியில் வீசுவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளும் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணி நடத்துகிறார்.

முதல் நாளான இன்று பஞ்சாப் மாநிலம் மோகாவில் பேரணி தொடங்குகிறது. பேரணி துவக்க நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி கொரோனா சூழலில் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர்; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 3 வேளாண் சட்டங்களை குப்பை தொட்டியில் வீசுவோம். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தால் ஏன் போராட்டங்களை நடத்துகின்றனர்? கொரோனா சூழலில் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க வேண்டிய அவசியம் என்ன?

விவசாயிகள் நலனுக்காக என்றால் வேளாண் மசோதாக்கள் மீது ஏன் முழுமையாக விவாதம் நடத்தவில்லை? என கூறினார். மேலும் ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு பதிலாக பாதிக்கப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.