சொந்த மாவட்டத்திலிருந்து பரப்புரையைத் தொடங்கும் எடப்பாடி

வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 19) முதல் தனது சொந்த மாவட்டமான சேலத்திலிருந்து தொடங்குகிறார்.

நேற்று அவர் சேலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை எடப்பாடி தொகுதியிலிருந்து தொடங்கவிருக்கிறேன். தேர்தலுக்கான நாள்கள் குறைவாக இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, இன்று தனது சொந்த ஊரான எடப்பாடி தொகுதியிலிருந்து பரப்புரையைத் தொடங்குகிறார். ஏற்கனவே திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், கரோனா ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து, அரசியல் கூட்டங்களுக்கும், மதக் கூட்டங்களுக்கும் கட்டுப்பாட்டு விதிகளுடன் இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.