வீட்டிலிருந்த ரூ.10.50 லட்சம் திருட்டு

கோட்டூர்புரத்தில் வீட்டில் வைத்திருந்த 10.50 லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ளது. வீட்டில் மர வேலை செய்யவந்த நபர் கொள்ளையடித்தாரா எனக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னை கோட்டூர்புரம் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருபவர் லட்சுமி சுப்பிரமணியம் (61). இவர் டிசம்பர் 12ஆம் தேதி தனது வீட்டு அலமாரியில் 12 லட்சம் ரூபாய் பணத்தை பையில் கட்டிவைத்திருந்தார்.

இவ்வேளையில் அலமாரி பழுது ஏற்பட்டதால், டிசம்பர் 13ஆம் தேதி அதனைச் சரிசெய்ய வேண்டி மர வேலை தொழிலாளி துரை என்பவரை வரவழைத்து வீட்டிலிருந்த அலமாரியைப் பழுது பார்த்துள்ளார்.

பின்னர் டிசம்பர் 16ஆம் தேதி அலமாரியில் வைத்திருந்த 12 லட்ச ரூபாயில் 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை காணவில்லை என்பது தெரியவந்தது. மீதம் 1 லட்சத்து 50 ரூபாய் அவர் வைத்த பையிலேயே இருந்துள்ளது.

இது தொடர்பாக லட்சுமி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து துரையிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.