அக்டோபர் 7, 8-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையில் பிரதான குழாய்கள் மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்வதால் பகுதி 5-க்குட்பட்ட இடங்களில் 07.10.2021 இரவு 8 மணி முதல் 8.10.2021 காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் பருவமழையை முன்னிட்டு நெடுஞ்சாலை துறையால் ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையில் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பணி நடைபெறும் இடத்தில் ஏற்கனவே உள்ள குடிநீர் கொண்டும் செல்லும் பிரதான குழாய்கள் சென்னை குடிநீர் வாரியத்தால் இடம் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இப்பணிகள் 07.10.2021 இரவு 8 மணி முதல் மறுநாள் (08.10.2021) காலை 6 மணி வரை நடைபெற உள்ளதால் பகுதி 5-க்குட்பட்ட வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் பகுதிகளில் குழாய் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.