ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் உள்ள சேக் சாயீத் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ஐதராபாத் அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் அபிஷேக் ஷர்மா 13 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்து வந்த கேன் வில்லியம்சனுடன் ஜேசன் ராய் ஜோடி சேர்ந்தார். சற்று நிதானமாக நிலைத்து நின்று ஆடிய இருவரும், சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினர்.ஆனால் 12-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. ஹர்ஷல் பட்டேல் வீசிய பந்தில் கேன் வில்லியம்சன 31 ரன்களில் (4 பவுண்டரிகள்) போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த பிரியம் கர்க் 15 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அரை சதத்தை நோக்கி முன்னேறிய ஜேசன் ராய் 44 ரன்களில் (5 பவுண்டரிகள்) 15-வது ஓவரில் டேனியல் கிறிஸ்டியன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் ஹர்ஷத் பட்டேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இது தவிர டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகளும், சாஹல் மற்றும் ஜார்ஜ் கார்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களுக்கு அணியின் சார்பில் கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் பட்டிக்கல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேனியல் கிரிஸ்டனும் 1 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரீகர் பாரத் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தேவ்தத் பட்டிக்கலுடன், மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியில் சீரான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்துவந்தநிலையில், மேக்ஸ்வெல் 40 (25) ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பட்டிக்கல் 41 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய ஷாபாஸ் அகமது 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.முடிவில் கார்டன் 2 ரன்களும், டி வில்லியர்ஸ் 19 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியாக பெங்களூரு அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல் மற்றும் மாலில் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.