வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நான்கு மாதங்களாக பல மாவட்டங்களில் அபரிமிதமாகவே பெய்துள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து விடும் அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும்.
வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை வானிலை மையம் விடுத்த அறிக்கையில் தெரிவிப்பதாவது: வடக்கு அந்தமான், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வரும் அக்டோபர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும், மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குமரிக்கடல் பகுதிகளில் பலத்தக் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 முதல் 45 மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்றும் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.