மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவுரை

மாநில அரசுகள் அறிவிக்கும் ஊரடங்கால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப் படக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப் படக்கூடாது என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது. இது குறித்து அனைத்து மாநில மற்றும் யூனிய பிரதேச அரசுகளுக்கும், மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பல மாநிலங்களில், ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது. தடுப்பூசி மையத்திற்கு மக்கள் சென்று வருவதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது. கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில், மருத்துவமனையின் தனி கட்டடத்தில் தடுப்பூசி மையம் இருக்கவேண்டும். அதை, அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.