சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ., 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்வதாகவும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ., 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மே 4ம் தேதி முதல் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் 2வது அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதால், சிபிஎஸ்இ., தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என டில்லி, மஹாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்களும் காங்., முன்னாள் தலைவர் ராகுல், காங்., பொதுச்செயலர் பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து இன்று (ஏப்.,14) பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும். தேர்வுக்கு 15 நாளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.