அரசு மருத்துவமனைகளில் புறநகர் சிகிச்சை பிரிவு சேவை புறக்கணிப்பு

டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து அசாம் மருத்துவ சேவை சங்க உறுப்பினர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் புறநகர் சிகிச்சை பிரிவு சேவையை புறக்கணித்தனர்.

அசாம் மாநிலம் ஹோஜாய் நகரில் உள்ள உதலி மாடல் மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் ஆத்திரத்தில் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

இதனால் மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் அவசரம் அவசரமாக மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். டாக்டர் சேனாபதி ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். ஆனால், அந்த கும்பல் கதவை உடைத்து டாக்டரை கொடூரமாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த டாக்டர், அருகில் உள்ள வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

டாக்டர் சேனாபதி தாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த நிலையா? என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 24 பேரை கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அசாம் மருத்துவ சேவை சங்கம் வலியுறுத்தி உள்ளது. மேலும், சங்க உறுப்பினர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் புறநகர் சிகிச்சை பிரிவு சேவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை பிரிவு, கொரோனா வார்டுகளில் மட்டும் வேலை செய்தனர். அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுகின்றனர்.