நம்மை காக்கும் காவல் துறையினருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை:தமிழக முதல்வர் அறிவிப்பு !

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இத்தகைய தொற்றுக் காலத்தில் களப்பணியாற்றிவரும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா காலத்திலும் தன் கடமையாற்றிவரும் காவலர்களின் தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு, ரூபாய் 5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 58 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.