பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு முகமை சம்மன் அனுப்பியது.
பாலிவுட் திரைப்பட உலகில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விசாரித்து வரும் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை, நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ராதா கபூர், ரகுல் ப்ரீத் சிங், திரை நட்சத்திரங்களுக்கான ஃபேஷன் ஆடை வடிமைப்பாளர் சைமோன் கம்பட்டா உள்ளிட்டோர் ஆஜராக புதன்கிழமை சம்மன் அனுப்பியிருக்கிறது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தை இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ விசாரித்து வருகிறது. அவருக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி விசாரணையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாலிவுட் பிரபலங்களுக்கு போதைப்பொருள் கிடைப்பது எப்படி என்பது குறித்த விசாரணையை தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை தனியாக விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நடிகை ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரரும் சுஷாந்த் சிங் நண்பருமான ஷோவிக் சக்ரவர்த்தி, சுஷாந்த் தங்கியிருந்த வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.