ரஜினி வீடு முன்பாக குவியும் ரசிகர்கள் – பரபரப்பாகும் போயஸ் கார்டன்

ரஜினி வீடு முன்பாக குவியும் ரசிகர்களால் போயஸ் கார்டன் பரபரப்பாகியுள்ளது.

உடல்நலக்குறவுக் காரணங்களால் அரசியலில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப் போவதாக சமூகவலைதளங்களில் ரஜினி பெயரில் ஓர் அறிக்கை வெளியானது.

இதையடுத்து ட்விட்டரில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்ட ரஜினிகாந்த், சமூக ஊடங்களில் வெளியான அறிக்கை தன்னுடையது அல்ல என்பது அனைவருக்கும் தெரியும் என கூறியிருந்தார். தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் வகையில் சென்னை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதோடு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு எதிரே ரசிகர்கள் வந்தவண்ணம் உள்ளனர். ரஜினிகாந்த் புகைப்படம் பொறித்த டி சர்ட், ‘ ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம்’ என்ற வாசக உடைகளையும் ரசிகர்கள் அணிந்து வந்திருந்தனர். ரஜினி பெயரில் பரவிய அறிக்கை, அதற்கு ரஜினி கொடுத்த விளக்கம், அரசியல் போஸ்டர்கள் என ரஜினிகாந்தை சுற்றி இரு தினங்களாக அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.