மம்தா பானர்ஜி மற்றும் உதயநிதி மீது புகார் – பிரகாஷ் ஜவடேகர் !

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பாஜக தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் குறித்து நாகரிகமற்ற வார்த்தைகளைப் பேசியதாகக் கூறி பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், முக்தர் அப்பாஸ் நக்வி, பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ், செய்தித் தொடர்பாளர் அனில் பலூனி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் இந்தப் புகாரை அளித்துள்ளனர்.

அவர்கள் கூறுவது,தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும்போது, வாக்குப்பதிவு மையத்தில் மம்தா பானர்ஜி தர்ணாவில் அமர்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது. தேர்தல் விதிகளுக்கு முரணானது. அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றும் மறைந்த பாஜக அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய இருவரும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக உயிரிழந்தனர் என்று ஆதாரமற்ற, நாகரிகமற்ற சொற்களை உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளோம் என்று கூறினார்.