பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
நாடே எதிர்பார்த்து காத்திருந்த இந்த தீர்ப்பை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த உஷார் நிலை கடைபிடிக்கப்பட்டிருந்தது. உடல்நலக்குறைவு காரணமாக இந்த வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பார்தி, கல்யாண் சிங், உள்ளிட்ட 6 பேர் நேரில் ஆஜராகாமல் ஆன்லைன் மூலம் ஆஜராகினர். மீதமுள்ள 26 பேரும் நேரில் ஆஜராகி இருந்த நிலையில் 12.30 மணியளவில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.
அதன்படி பாபர் மசூதி இந்திய வரலாற்றின் மிக முக்கிய தருணம் எனக்கூறி நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார். குற்றம்சாட்டப்பட்ட 32 பேர் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முழுமையாக நிரூபணமாகவில்லை எனக்கூறிய நீதிபதி, பாபர் மசூதி இடிப்பு திட்டமிடப்பட்டு நடந்த சம்பவம் என்பதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். எனவே குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்வதாக கூறி உத்தரவிட்டுள்ளார்.