கனிமவள உதவி இயக்குனர் வீட்டில் சோதனை- 100 சவரன் பறிமுதல்

கனிமவள உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டதில் 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனராக இருப்பவர் பெருமாள். இவரது வீடு ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ளது. அந்த வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 100 சவரன் தங்க நகையைப் பறிமுதல் செய்துள்ளனர். முன்னதாக அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதில், 1 லட்ச ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்து, உதவி இயக்குனர் பெருமாளிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில், 21ஆம் தேதி அலுவலகத்தில் நடந்த சோதனை அடிப்படையில், 22ஆம் தேதி பவானியில் உள்ள அவரது வீட்டில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில், ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் உள்பட லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 மணி நேரத்திற்கு மேலாக அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து உரிய ஆவணம் இன்றி கணக்கில் வராத 100 சவரன் தங்க நகைகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் இருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குவாரிகளுக்கான அனுமதி அதற்கான லைசென்ஸ் கொடுப்பதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு பல லட்சம் லஞ்சம் கைமாறுவது வாடிக்கையாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.