ஆசிரியர் பணிநியமன மோசடிக்கு அண்ணா பல்கலைக்கழகம் பொறுப்பாகாது!

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பதவிக்கான அறிவிப்புகள் கண்டு விண்ணப்பித்த ஒரு சில விண்ணப்பதாரர்களிடமிருந்து தக்க ஆதாரங்களுடன் புகார்கள் வந்துள்ளன.

ஒரு சில அங்கீகரிக்கப்படாத நபர்கள் அவர்களை தொடர்புகொண்டு அவர்களின் பெயர்கள் தேர்வு பட்டியலில் உள்ளன. மேலும் அவர்களை ஆசிரியர் பணியில் நியமிப்பதற்கான வழிவகை செய்வோம் என்று கூறியுள்ளனர்.

அந்த அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை தொடங்க பல்கலைகழகம் செயல்பட்டுவருகிறது. இதுபோன்ற நம்பகத்தன்மையற்ற தொலைபேசி அழைப்புகள், வேறு வழியிலான தொடர்புகளை பொருட்படுத்த வேண்டாம்.

அங்கீகரிக்கப்படாத நபர்களின் இந்த வகையான நெறிமுறையற்ற மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கும் பல்கலைக்கழகம் பொறுப்பல்ல.

இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் அல்லது வேறு வழியிலான தகவல் தொடர்பு முறையில் பதில் அளித்தல் மற்றும் அவர்களது சொந்த பொறுப்பில் அவ்வாறு செய்தால் அந்த செயலுக்கு பல்கலைக்கழகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது” என குறிப்பிட்டுள்ளார்