தமிழகத்தில் 1 நபருக்கு உருமாறிய கொரோனா

உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முதலில் பிரிட்டனில் பரவியது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்பட பல நாடுகள் தடை செய்தன.

இதற்கிடையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐசிஎம்ஆர்) ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்நிலையில், இந்தியாவில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் இன்று தெரிவித்துள்ளது. 

இதையடுத்து தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகியுள்ளது. அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உருமாறிய கொரோனாபாதித்தவருடன் தொடர்பில் இருந்த 15பேருக்கு கொரோனா இல்லை.

தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு குறைவாகவே உள்ளது