என்ன செய்கிறது சீனா?

இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியை அளித்திருந்தது. இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் தாவாங் பகுதியில் இந்திய – திபெத் எல்லைக் காவல் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சீன பாதுகாப்பு படையினர் அதிகமாக குவிக்கப்பட்டிருக்கும் தாவாங் பகுதியில் திடீரென இந்திய – திபெத் எல்லைக் காவல் படையினர் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர். படைகளை அதிகமாக குவிக்கும் வகையில் சாலை வசதிகள் அங்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஐடிபிபி கமாண்டர் ஐ.பி.ஜா கூறுகையில், “கிழக்கு லடாக்கில் இதுபோன்று சீன ராணுவம் படைகளை குவிக்கும் போது, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். இது ஒன்றும் புதிதல்ல. இம்மாதிரியான மிகவும் குளிர்ந்த காலத்தில் மிகக் கடினமாக இருக்கும். இருப்பினும், நமது ராணுவ வீரர்கள் எச்சரிக்கையாக உள்ளனர்‌. எல்லைப் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இங்கே யாரும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்க முடியாது. எல்லைப் பகுதிகளை பாதுகாக்க நாட்டுக்கு உறுதிமொழி அளித்துள்ளோம். தயார் நிலையில் இருந்து கொண்டு கடமையாற்றி வருகிறோம்” என்றார்.

இந்திய-சீன படைகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அருணாச்சலப் பிரதேசம், கிழக்கு லடாக் ஆகிய இரண்டு பகுதிகளிலும் இந்தோ திபெத் எல்லைக் காவல்படை மிக முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. மோதல் போக்கின் தொடக்க காலத்தில், பாங்காங் ஏரி, ஃபிங்கர் பகுதி ஆகிய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவ வீரர்களுடன் பல என்கவுண்ட்டர் சம்பவங்களில் இந்தோ திபெத் எல்லைகாவல் படையினர் ஈடுபட்டு இருந்தனர்.